வத்திராயிருப்பு: ஆனி பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த 1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஆனி பவுர்ணமி என்பதால் சென்னை, விருதுநகர், நெல்லை, கோவை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை 1 மணி முதலே தாணிப்பாறையில் குவிந்தனர். காலை 6.20 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. சோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
ஆனி பவுர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, விருதுநகர், திருவில்லிபுத்தூர், சிவகாசி, வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் இருந்து தாணிப்பாறைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்றுடன் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி முடிவடைகிறது.