சாயல்குடி,ஏப்.26: தூத்துக்குடி மாவட்டத்தில் வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து முதுகுளத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து வி.ஏ.ஓவை வெட்டி கொலை செய்ததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் சுரேஷ், செயலாளர் பூமுருகன், பொருளாளர் ஐய்யப்பன் முன்னிலை வகித்தனர்.இதில் கொலை சம்பவத்தை கண்டித்தும், வி.ஏ.ஓகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதில் முதுகுளத்தூர் விஏஓ முருகன், ராமையா மற்றும் விஏஓகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.