Sunday, October 6, 2024
Home » டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைப்பு

டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைப்பு

by Karthik Yash

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவசாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார். ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி-அரியானா எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2021 டிசம்பர் வரை ஓராண்டுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், லகீம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்த சம்யுதா கிஷான் மோச்சா மற்றும் கிசான் மஸ்டோர் மோச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் (13ம் தேதி) சுமார் 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர். 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 டிராக்டர்களில் டெல்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். அதேபோல் உத்தரபிரதேசம், சண்டிகர், பஞ்சாப்பில் இருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டனர். மேலும், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த போராட்டத்தில் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி வரை டெல்லி சலோ பேரணியாக நிறுத்திவைப்பதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதே வேளையில் பஞ்சாப்- அரியானா எல்லை ஷம்பு மற்றும் கனா ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்போம் எனத் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த 21 வயதான சுப் கரண் சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்படும் எனத் விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi