டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி உள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் வரும் 28ம் தேதி வரை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது கைதுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் மெகா பேரணி நடத்தப்பட உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் மார்ச் 31 டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்த உள்ளன. இந்த பேரணியில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பிரதமர் இல்லம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.