புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அம்ரித் உத்யான் மெட்ரோ நிலையத்துக்கு வரும் பயணிகளுக்காக,டெல்லி சென்ட்ரல் செக்ரட்ரியேட் நிலையம் மற்றும் அம்ரித் உத்யன் இடையே பஸ் சேவையை ஜனாதிபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் காஷ்மீரி கேட் -மற்றும் பரிதாபாத் ராஜா நஹர் சிங் இடையிலான மெட்ரோ ரயிலில் ஜனாதிபதி பயணம் செய்தார். இந்த பயணத்தில் தன்னுடன் பயணித்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முர்மு மெட்ரோவில் பயணம் செய்வது இதுவே முதல் முறை. 2012ல் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் மெட்ரோவில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.