புதுடெல்லி: 1,643 கிமீ நீளமுள்ள இந்தியா-மியான்மர் எல்லையில் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் இருநாட்டிலும் 16 கிமீ தூரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதால் மியான்மர் எல்லை பதற்றமாக மாறி உள்ளது. இதையடுத்து மியான்மர் எல்லை முழுவதும் மின்வேலி அமைக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதுபற்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசு ஊடுருவ முடியாத எல்லைகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. 1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கண்காணிப்பை எளிதாக்கும் வகையில், எல்லையில் ரோந்துப் பாதையும் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு கூறியுள்ளார்.