மேட்டுப்பாளையம்: தம்பியிடம் காரை வாங்கி திருப்பி தராமல் கொலைமிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை அடுத்த மேட்டுப்பாளையம் கெண்டையூர் ரோடு பகுதியைச்சேர்ந்த அன்சாரி என்பவரது மகன் முஸ்தபா(49). இவர் கோல்ட் கவரிங் கடை நடத்தி வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனு விவரம்:
எனது அண்ணன் நாசர் (அதிமுக கோவை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்). இவர் ஓராண்டுக்கு முன், கட்சி வேலைகள் இருப்பதால் எனது காரை 2 மாதங்கள் உபயோகப்படுத்தி விட்டு தருவதாக கூறி எடுத்துச்சென்றார். ஆனால் இதுவரை எனது காரை என்னிடம் ஒப்படைக்கவில்லை. இதை கேட்டதால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என் காரை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் விசாரணை நடத்துமாறு நீதிபதி பிரகாஷ் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீசார் தகாத வார்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது, பொருளை அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நாசர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதிமுக கோவை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் மீது சொந்த தம்பியே போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.