திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் வளர்க்கப்பட்டு வரும் மீன்களை ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. இந்த நிலையில் மழை நீருடன் திருவள்ளூர் நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்துவிட்டதால் புட்லூர் ஏரியில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசியது. இதனால் கடும் சிரமப்பட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மேற்பார்வையில், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்யநாராயணன், உதவி பொறியாளர் செல்வகுமாரி ஆகியோர் தலைமையில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் வந்து புட்லூர் ஏரியில் செத்து மிதந்த மீன்களை அகற்றினர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது.