ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே, தங்கச்சிமடத்தில் வில்லுண்டி தீர்த்த கிணற்றின் தடுப்புகள் இடிந்து சேதமடைந்துள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கடலில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு 22 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடி சாமி தரிசனம் செய்வர். இதுதவிர கோயிலுக்கு வெளியே பல்வேறு இடங்களில் தீர்த்தக்கிணறுகள் உள்ளன. இவைகளை பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மட்டும் வருவர்; சிலர் நீராடுவர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள வில்லுண்டி தீர்த்தக்கிணறு ராமல் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம். நன்னீர் ஊற்றெடுக்கும் இந்த தீர்த்தக்கிணறுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தீர்த்தக்கிணறுக்கு கான்கிரீட் பாலம் வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர். ஆனால், தீர்த்தக் கிணறை சுற்றியுள்ள தடுப்புகள் சேதமடைந்துள்ளன. தற்காலிகமாக மரக்கட்டைகளால் தடுப்பு அமைத்துள்ளனர். இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் புகைப்படம், செல்பி எடுக்கும் ஆர்வத்தில் கடலில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, தீர்த்தக்கிணறை சுற்றியுள்ள தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.