விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்குட்பட்ட மரக்கோணம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்பி பேசியதாவது: ஒன்றியத்தில் இருக்கின்ற அரசு மதத்தின் பெயரால் இன்றைக்கு நாட்டை துண்டாட பார்க்கிறது. தற்போது புதுசா ஒரு தலைவர் (அண்ணாமலை) வந்துள்ள நிலையில் பாஜ ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு வேலை வாய்ப்பு தருவோம் என கூறி வருகிறார். ஒன்றியத்தில் ஒன்பது, பத்து வருஷமா யார் ஆட்சி நடந்தது.
கேட்கிறவன் கேனையா இருந்தா இந்த கேனை எது வேண்டுமாலும் பேசும். 10 வருஷமா யார் ஆண்டது. பாஜ நரேந்திர மோடி தான். 10 ஆண்டு காலத்தில் எத்தனை பேருக்கு தமிழ்நாட்டில் வேலை கொடுத்து இருக்கின்றார்கள். இந்தியாவில் இருந்த அரசு நிறுவனங்கள் அனைத்தையும் விற்பனை செய்து விட்ட பாஜ அரசு அம்பானி, அதானி மட்டும் தான் வளர்த்துள்ளது. பாரத பிரதமர் மோடி போகின்ற இடமெல்லாம் திருவள்ளுவரை பற்றி பேசி வருகிறார். தமிழ் மற்றும் திருவள்ளுவர் என பேசுவார். மறுபக்கம் இந்தி திணிப்பை நாட்டில் செய்து வருகிறார். ஒரு பக்கம் திருவள்ளுவர்… மறுபக்கம் இந்தி திணிப்பு… இதுதான் ஒன்றிய அரசில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.