Sunday, June 16, 2024
Home » கூடலூர் தாவர மரபியல் பூங்காவில் சாகச ரோப் பயண சோதனை ஓட்டம்

கூடலூர் தாவர மரபியல் பூங்காவில் சாகச ரோப் பயண சோதனை ஓட்டம்

by Lakshmipathi

கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் அமைந்துள்ள தாவர மரபியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாகச ரோப் பயணத்திற்கான கம்பி வடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. தாவர மரபியல் பூங்காவின் புல்வெளிகள், இயற்கை அழகு மற்றும் அங்கிருந்து தெரியும் மலைத்தொடர் காட்சிகள் ஆகியவற்றை சாகச பயணத்தில் பார்த்து ரசிக்கும் வகையில் சுமார் 550 மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதையாக இந்த ரோப் கார் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கம்பிகளில் அமைக்கப்பட்டுள்ள பெல்ட்டுகளை இருப்பில் பொருத்தி ஒரே நேரத்தில் இரண்டு நபர்கள் தனித்தனியாக பயணிக்கும் வகையில் இந்த ரோப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் முடிவடைந்து நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வனச்சரகர் வீரமணி மேற்பார்வையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் வனத்துறையினர் கம்பிகளில் உள்ள பெல்ட்டை இடுப்பில் பொருத்தியவாறு கம்பிவட உதவியுடன் அந்தரத்தில் பறந்து சாகச பயணம் மேற்கொண்டனர்.

வரும் 31ம் தேதி இது குறித்து ஆய்வு செய்வதற்காக சுற்றுலா துறையில் இருந்து அதிகாரிகள் வர உள்ளனர். வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாகச ரோப் பயணத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து அவர்கள் அளிக்கும் அனுமதி அடிப்படையில் தொடர்ந்து இயங்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த தாவர மரபியல் பூங்காவில் அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள், அருங்காட்சியகம், பரணி இல்லம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை பார்த்து ரசித்துச் செல்வதோடு தாவர மரபியல் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் கல்வி பயிலும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குஏராளமான தகவல்களை பெறும் வகையிலும் அமைந்துள்ளது. தற்போது இங்கு அமைக்கப்பட்டு வரும் சாகச ரோப் பயணம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi