Friday, May 17, 2024
Home » குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டதால் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக அமலாக்க துறை பதிந்த வழக்கு ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டதால் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக அமலாக்க துறை பதிந்த வழக்கு ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

by Arun Kumar


சென்னை: குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டால் அதனடிப்படையில் தொடரப்பட்ட அமலாக்க துறையின் வழக்கை விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் நிறுவனத்தை எஸ்.கே பீட்டர், ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து தொடங்கினர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் பிரிந்தனர். இந்நிலையில், ஸ்ரீராமுக்கு கொடுக்க வேண்டிய பங்கை எஸ்.கே.பீட்டர் கொடுக்க மறுத்துள்ளார். அதனால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீராம் புகார் செய்தார். இதையடுத்த எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சுமார் ரூ.50 கோடி வரை பணபரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறி எஸ்.கே.பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனடிப்படையில் நிறுவனத்திற்கு எதிராக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து, ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டருக்கும் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து பீட்டர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்னையில் தலையிட்டு அமலாக்க துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பித்தர அமலாக்க துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘நிறுவனத்துக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதனால், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையை தொடர முடியாது’ என்றார்.

அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ‘மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மூல வழக்கான மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதனடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்க துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது’ என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

five + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi