நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ பரவ காரணமான தேயிலைத் தோட்ட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 65 சதவிகித வனபகுதி நிறைந்துள்ளது. இங்கு இருக்க கூடிய வனபகுதியை நம்பியே கோவை, ஈரோடு, மேட்டுபாளையம் பகுதிகள் நீராதாரம், விவசாயம், மின் தேவை உள்ளிட்டவை பூர்த்தி செய்யப்படுவதால் இந்த வனப்பகுதி மிக முக்கியமானதாக கருதபடுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக (12.03.2024) அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பயிர்களை கவாத் வெட்டி கழிவுகளை வனபகுதியில் போட்டு எரித்ததன் காரணமாக சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியில் இருக்க கூடிய அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது.
இந்த செயலுக்கு காரணமானவர்கள் குறித்து வனத்துறையினர் கண்டறிந்த பின்னர் தோட்ட உரிமையாளர் ஜெயசீலபாண்டியன், கருப்பையா, மோகன், ஜெயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குன்னூர் சிறையில் அடைத்துள்ளனர்.