ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைகாய்கறி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை நீலகிரியில் தென்மேற்கு,வடகிழக்கு என இரு பருவமழை மழை கொட்டி தீர்க்கும்.இந்த மழையால் நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள நீரோடைகள்,குளங்கள் நிரம்பி விடும். இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது. மழை சமயத்தில் விவசாயிகள் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் சமமான பகுதிகளில் அதிகளவு விவசாயம் மேற்க்கொள்வார்கள்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை தாமதமாக தற்போது தான் துவங்கியுள்ளது. கடந்த 4 நாட்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர், கூடலூர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல் மலை காய்கறி விவசாயமும் சுறுசுறுப்படைந்துள்ளது. ஏற்கனவே பயிரிட்ட உருளைகிழங்கு, கேரட் உள்ளிட்டவை நல்ல மகசூல் தந்த நிலையில் அவற்றை அறுவடை செய்து மார்கெட்டிற்கு அனுப்பி வருகின்றனர்.மேலும் கொல்லிமலை, முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை, எப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இம்முறை நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்கியுள்ளது. அவ்வப்போது இடைவெளி விட்டு பெய்தாலும் விவசாயத்திற்கு ஏற்ற வகையில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி காய்கறி பயிரிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம், என்றனர்.