நாமக்கல்லை அடுத்த மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ்(45). இவர் அகிம்ஷா சோசியலிஸ்ட் என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். தேசிய மலரான தாமரை சின்னத்தை பாஜவிற்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் காந்தியவாதி ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: அரசின் இணையதளத்திலும் தாமரை இடம் பெற்றுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட கட்சியின் சின்னமாக இது இருக்கக்கூடாது. நான் இதுவரை 10 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். குடியரசு தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். பிரதமர் போட்டியிடும் வாரணாசியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.