சென்னை: தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சில இடங்களில் டோக்கன் கொடுக்கப்பட்டதால் மாலை 7 மணி வரை நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். வடசென்னை தொகுதி ஆர்.கே.நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. அவை சரிசெய்த பின்னர் பொதுமக்கள் வாக்களித்தனர். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவில் உள்ள வாக்குச்சாவடி எண் 21, 22, 23, 24ல் வாக்குகள் பதிவான பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் மூடி சீல் வைத்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல, லாரியில் ஏற்றினர்.
அப்போது தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மணி முருகன் என்பவர், லாரியில் ஏறி வாக்குபெட்டிகளை ஏற்றியுள்ளார். அப்ேபாது, எதிர்பாராதவிதமாக வாக்குப் பெட்டி தவறி கீழே விழுந்ததில் மணி முருகனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.