சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று (16.06.2023) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையத்தை (Call Center) திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வணிகவரித்துறை, வரி நிர்வாகத்தில் தொடர்ந்து புதுமையான மற்றும் அறிவியல் பூர்வமான உத்திகளைப் பயன்படுத்தியும் வணிகர்களிடையே வரி செலுத்துவதில் தன்னார்வ இணக்கத்தை ஊக்குவித்தும் அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் முன்னோடித் துறையாக வணிகவரித்துறை விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மிக உறுதுணையாக இத்துறை தன்னை இனங்காட்டிக் கொண்டுள்ளது.
வணிகவரித்துறையில் தற்பொழுது 11 லட்சம் வணிகர்கள் முறையாக நமூனாக்கள் (Monthly Returns) தாக்கல் செய்து, உரிய வரியை செலுத்தி வருகின்றனர் . சில வணிகர்கள் உரிய நேரத்தில் நமூனாக்கள் தாக்கல் செய்யாமலும், செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமலும் இருக்கும் நிலை தொடர்கிறது. 40 இதனை நேர் செய்யும் வகையில், ரூபாய் 1.80 கோடி மதிப்பீட்டில் பணியாளர்களைக் கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அழைப்பு மையம் (கால் சென்டர்) அமைச்சர் இன்று திறந்து வைக்கப்பட்டது
இந்த அழைப்பு மையத்தின் பணியாளர்கள், நமூனாக்கள் தாக்கல் செய்யாத மற்றும் வரி செலுத்தாத வணிகர்களை தொடர்ந்து கண்காணித்து, தரவுகளை ஆய்வு செய்து, அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைந்து நமூனாக்கள் தாக்கல் செய்வதோடு, உரிய வரியையும் செலுத்துமாறு அறிவுறுத்துவார்கள். வணிகர்களிடம் பெறப்படும் பதில்கள் அழைப்பு மையத்தின் மென்பொருள் மூலம் மின்னஞ்சல் வழியே உரிய வரி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, மேல் அதிகாரிகளின் ஆய்வுக்காக தரவுகள் பகிரப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இந்த நிதியாண்டில் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி, அரசு முதன்மைச் செயலாளர்/வணிகவரி ஆணையர் தீரஜ்குமார், கூடுதல் ஆணையர் நிர்வாகம் வி.ஆர். சுப்புலட்சுமி, வணிகவரி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்