பாட்னா: லோக்சபா தேர்தலில் மோடி தோற்றால் அவர் வெளிநாட்டில் தஞ்சம் அடைவார் என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார். பீகார் மாநில அமைச்சரும், மகனுமான தேஜ் பிரதாப் யாதவால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் தோல்வி அச்சத்தில் பிரதமர் மோடி இருக்கிறார். அவர் லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தால் வெளிநாட்டில் தஞ்சம் அடைவார். அவர் இந்தியாவை விட்டு வெளியேற நினைக்கிறார். அதனால் தான் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார்.
அங்கு பீட்சா, மோமோஸ், நூடுல்ஸ் போன்றவற்றை ருசித்து சாப்பிட்டு வருகிறார். எந்த நாட்டில் தஞ்சமடையலாம்? ஓய்வெடுக்க சரியான நாடு எது? என்று இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் மும்பையில் நடக்கும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமை தொடர்ந்து பேணப்பட வேண்டும். பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மோடி அரசை கவிழ்க்க வேண்டும். மணிப்பூரில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு, ஒன்றிய அரசு தான் காரணம்’ என்று லாலு குற்றம் சாட்டினார்.