கரூர், நவ. 7: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தொட்டி அகற்றப்பட்டதால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.கரூர் தாந்தோணிமலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் உட்பட பல்வேறு வேலை நிமித்தமாகவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வந்து செல்லும் குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் நுழைவு வாயில் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. பொதுமக்கள் அதிகளவு இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தி தாகம் தீர்த்து வந்தனர். இந்நிலையில், தொட்டியை பழுதுநீக்கும் வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அகற்றப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது. அதற்கு பிறகு இதுவரை தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு நேற்று வந்த மக்கள், குடிநீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்காக குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.