ஊட்டி : காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அணிக்கொரையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் அருணா மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு, உணவுக்கூடம், சமையற் பொருட்கள் வைக்கும் அறை, பாத்திரங்கள் வைக்கும் அறை ஆகியவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டார். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா?, அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாணவ, மாணவிகள் சத்தான உணவு உட்கொண்டு, நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் இத்திட்டத்தினை முறையாக செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இப்பள்ளியிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, ஊட்டி நகராட்சி காந்தல் பகுதியிலுள்ள திருவள்ளுவர் தெரு, அம்பேத்கர் நகர் ஆகிய தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து, திருவள்ளுவர் தெருவில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.85 லட்சம் மதிப்பீட்டில், சமுதாயக் கழிப்பறை புனரமைப்பு செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டார். இப்பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, ஊட்டி நகர் நல அலுவலர் ஸ்ரீதர், நகராட்சி பொறியாளர்கள், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
மாவட்ட கலெக்டர் அருணா நேற்று ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அங்கன்வாடி பணியாளர்களிடம் கர்ப்பணி ெபண்கள் மற்றும் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து கேட்டறிந்தார். மேலும், குழந்தைகள் எடை, உயரம் மற்றும் கற்றல் திறனை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், தர் ஆகியோர் உடனிருந்தனர்.