Sunday, June 16, 2024
Home » விஐபிக்கள், விழாக்களுக்கு சப்ளை; கோகைன் விற்பனையில் ஈடுபட்ட சென்னை இன்ஜினியர் சிக்கினார்: சம்பாதித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை

விஐபிக்கள், விழாக்களுக்கு சப்ளை; கோகைன் விற்பனையில் ஈடுபட்ட சென்னை இன்ஜினியர் சிக்கினார்: சம்பாதித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை

by Neethimaan


அண்ணாநகர்: விஐபிக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கோகைன் சப்ளை செய்துவந்த இன்ஜினியரை கைது செய்தனர். விசாரணையில், ‘’போதை பொருட்கள் விற்பனை பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திவந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. சென்னை அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் மற்றும் சூளைமேடு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அண்ணாநகர் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் 3 சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமைந்தகரையில் கோகைன் போதை பொருள் விற்பனை செய்ததாக நைஜீரியா நாட்டை சேர்ந்த 3 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில் திருமங்கலம் பகுதியில் ஒரு வாலியர் கோகைன் போதை பொருள் விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவல்படி, திருமங்கலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சிபுக்குமார் தலைமையில் தனிப்படையினர் நேற்றுமுன்தினம் இரவு திருமங்கலம் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தபோது ஒரு வாலிபர் செல்போன் மூலம் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்தார். இதன்பின்னர் அந்த வாலிபர் பைக்கில் புறப்பட்டபோது போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். கீழ்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்றபோது போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து அந்த வீட்டில் சோதனை நடத்தி சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 12 கிராம் கோகைன் மற்றும் 5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் இப்ரம்ஜான்(29) என்று தெரிந்தது. அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசாரிடம் இப்ரம்ஜான் கூறியதாவது; இன்ஜினியர் படித்துவிட்டு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றேன். கோகைன் போதை பழக்கத்துக்கு அடிமையானேன். கோகைன் போதை பொருளை நைஜீரியா கும்பல் சென்னையில் விற்பனை செய்தனர். நைஜீரியா கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததால் கோகைன் கிடைக்கவில்லை. போதை பொருள் நைஜீரியா நாட்டில் இருந்து பெங்களூருக்கு எப்படி வருகிறது என்று தெரிந்துகொண்டு ஒரு கிராம் கோகைன் 5 ஆயிரம் என மொத்தமாக 5 லட்சத்துக்கு வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து ஒரு கிராம் 15 ஆயிரம் என விற்பனை செய்து வந்தேன்.

கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய பிறகு வாட்ஸ் அப் மூலம் ரகசிய இடத்துக்கு மெசேஜ் அனுப்பிய பிறகு அந்த இடத்தில் வந்து வாங்கி கொள்வார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பிரபல மால் மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சி, விஐபிக்கள் பார்ட்டி நடக்கும் இடத்தில் சென்று கோகைனை விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதித்து உல்லாசமாக வாழ்ந்தேன். இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

12 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi