கூடுவாஞ்சேரி: சென்னை வண்டலூர் அருகே சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, கிளாம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நவீன பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் தென்மாவட்ட பகுதிகளுக்கு 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இங்கிருந்து தென்மாவட்டப் பகுதிகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள், வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் ஏராளமான பயணிகளை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ஜிஎஸ்டி நெடுஞ்சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி, வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு செல்வதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இதனால் அப்பேருந்துகளின் பின்னால் வேகமாக வரும் கார், கனரக லாரி உள்பட பல்வேறு வாகனங்கள், சாலையில் நின்றிருக்கும் பேருந்துகள்மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றன. மேலும் அதிகளவிலான வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அத்துடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளில் செல்ல வேண்டிய வெளியூர் பயணிகள், ஜிஎஸ்டி சாலையை ஆபத்தான முறையில் கடந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல வேண்டி உள்ளது. அங்குள்ள சென்டர் மீடியனை அகற்றிவிட்டு, அவ்வழியே மாநகர பேருந்துகள் வந்து செல்லவும், அங்கு சிக்னல் அமைக்கவும் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியூர் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.