Monday, April 29, 2024
Home » சினிமா பாணியில் மாறிய பை 40 பவுன் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்

சினிமா பாணியில் மாறிய பை 40 பவுன் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்

by Lakshmipathi

தஞ்சாவூர் : சென்னையிலிருந்து செங்கோட்டை சென்ற ரயிலில் தவறவிட்ட 40 பவுன் நகை இருந்த பையை ரயில்வே போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.திருநெல்வேலி கே.டி.சி நகர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருநெல்வேலிக்கு பயணம் செய்தார். இதேபோல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த முகமது ஷெர்ஷா மகள் லூப்னா நாசரேத் என்பவரும் அதே ரயிலில் பட்டுக்கோட்டைக்கு பயணம் செய்தார். இருவரும் ஒரே பெட்டியில் அருகருகே பயணம் செய்த நிலையில் இருவரும் ஒரே கலரில் டிராவல் பேக்குகளை வைத்திருந்தனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை வந்தவுடன் லூப்னா நாசரேத் தவறுதலாக, ஸ்ரீதேவியின் பேக்கை எடுத்துக் கொண்டு இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருநெல்வேலியில் இறங்கிய ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று பார்த்தபோது தான் வைத்திருந்த பேக்கில் உள்ளே வைத்திருந்த 40 பவுன் நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பையில் வேறு பொருள்கள் இருந்ததால் பை மாறியிருப்பது குறித்து நெல்லை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் பட்டுக்கோட்டையில் இறங்கிய பயணி குறித்த விபரங்களை சேகரித்தனர். பின்னர் பட்டுக்கோட்டை ரயில்வே போலீசார் நேற்று மதியம் லூப்னா நாசரேத் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு ஸ்ரீதேவியின் பேக் இருந்தது.

அதனுள் நகையும் பத்திரமாக இருந்ததும் தெரியவந்தது. லூப்னா நாசரேத், ஸ்ரீதேவியின் பேக்கை தவறுதலாக மாற்றி எடுத்துச் சென்றதை அறியாமல் அது தன்னுடைய பேக் தான் என நினைத்து அதை திறக்காமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இதனையடுத்து அவரையும், ஸ்ரீதேவியையும் பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் நேற்று மாலை பையை ஸ்ரீதேவியிடம் ஒப்படைத்தனர். அதை பெற்றுக் கொண்ட ஸ்ரீதேவி கண்ணீர் மல்க லூப்னா நாசரேத் மற்றும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi