Sunday, June 16, 2024
Home » சித்தூர் அருகே 8 கிராமங்களில் புகுந்து அட்டகாசம் பயிர்களை துவம்சம் செய்த 14 காட்டுயானைகள்

சித்தூர் அருகே 8 கிராமங்களில் புகுந்து அட்டகாசம் பயிர்களை துவம்சம் செய்த 14 காட்டுயானைகள்

by Lakshmipathi
Published: Last Updated on

*விடிய விடிய பரபரப்பு

சித்தூர் : சித்தூர் அருகே விவசாய நிலங்களில் புகுந்த 14 காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் 8 கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.சித்தூர் மாவட்டம் வி.கோட்டா மண்டலத்துக்கு உட்பட்டு 8 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து 14 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்தது. தொடர்ந்து விவசாய நிலங்களில் இருந்த வாழை மற்றும் நெற்பயிர்களை துவம்சம் செய்தன. தொடர்ந்து 8 கிராமங்கள் வழியாக விவசாய நிலங்களிலேயே பயணித்த யானைகளால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் விவசாயிகள் யானைகளை விரட்டும் பணியில் விடியவிடிய ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை ஜமுனா கிராமத்தில் புகுந்த யானைக்கூட்டத்தைக் கண்டு அக்கிராம மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பலமநேர் வனத்துறை அலுவலகத்திற்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் சுமார் 4 மணிநேரம் போராடி கிராம மக்கள் உதவியுடன் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தொடர்ந்து கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:கடந்த 2 மாதங்களாக வி.கோட்டா மற்றும் பைரெட்டிப்பள்ளி மண்டல எல்லையோர வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகள், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பலமுறை வனத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் முன் எச்சரிக்கையாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது 14 யானைகள் கூட்டம் தனமய்யகரிப்பள்ளி, கொம்மாரமடுகு, நக்கனப்பள்ளி, மொட்லப்பள்ளி, பாலேந்திரப்பள்ளி, எரிநாகேபள்ளி, வட்டிப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் புகுந்து விவசாய பயிர்களான தக்காளி, பீன்ஸ், சோளம், வாழை போன்ற பயிர்களை தேப்படுத்தி உள்ளன.

யானைகள் நடமாட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதம் அடைந்த பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு
உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi