Sunday, October 6, 2024
Home » குழந்தை பருவம் முதல் அரசியல் பயணம் வரை அதிசயிக்கும் கண்காட்சிகள்; அண்ணா மற்றும் கலைஞரின் பிரமிக்க வைக்கும் நினைவிடம் நாளை மறுநாள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

குழந்தை பருவம் முதல் அரசியல் பயணம் வரை அதிசயிக்கும் கண்காட்சிகள்; அண்ணா மற்றும் கலைஞரின் பிரமிக்க வைக்கும் நினைவிடம் நாளை மறுநாள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

by MuthuKumar

சென்னை: கலைஞரின் குழந்தை பருவம் முதல் அவரது அரசியல் பயணம் வரை ஒரு பிரமிக்க வைக்கும் கண்காட்சி மற்றும் நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாட்டு வரலாற்றில் 19 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து, தமிழ் நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி; இந்திய அரசியலில் எழுச்சியை ஏற்படுத்தி, உலக வரலாற்றில் உன்னதப் புகழ்ச் சின்னமாகத் திகழும் கலைஞர் 95ம் வயதில் 2018 ஆகஸ்டு 7ம் தேதி மறைந்து, நீதிமன்றத்தின் ஆணை பெற்று அண்ணா நினைவிடம் அருகிலேயே இடம் கொண்டார்கள்.

அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம் – கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணா சிலை; வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் அமைந்து நம்மை மகிழ்விக்கின்றன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது.

அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அமைந்த மண்டபங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடுகின்றன. அண்ணா சதுக்கத்தைக் கடந்து சென்றால் அமர்ந்த நிலையில் கலைஞர் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையை காணலாம். சிலையைக் கடந்து சென்றால் எதிரே அமைந்துள்ள கலைஞர் சதுக்கம் நம் நெஞ்சை ஒரு கணம் அமைதி கொள்ளச் செய்கிறது. சதுக்கத்தில், “ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் தொடர் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், தமிழ் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கலைஞருக்கு 8-11-2005 அன்று எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப் பட்டுள்ளன.

சதுக்கத்தின் பின்புறம் கலைஞர் புன்னகை பூத்தமுகம் பொன்னிறத்தில் மிளிர்வதுடன் சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிர்கின்றன. கலைஞர் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது. கலைஞர் உலகம் பகுதியில் இடப்புறம் சென்றால் நடைபாதையின் வலப்புறத்தில் கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டு விளக்கொளியுடன் மிளிர்கின்றன.

உள்ளே வலப்பக்கம் திரும்பினால், இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப் பட்டுள்ளது. அதன் கீழ்ப்புறம், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என கலைஞர் 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன. அருகில், கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறை அதில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் அமைந்து நமக்கு மலைப்பைத் தருகின்றன.

அடுத்து “உரிமைப் போராளி கலைஞர்” எனும் தலைப்பைக் கொண்ட அறையில் நுழைந்தால் – தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் வகையில் சென்னைக் கோட்டையில் முதன் முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கலைஞர் உரையாற்றும் காட்சி அமைப்புடன் பின்புறம் தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் அமைந்து நம்மை வரவேற்கிறது. அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கும் கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. வலப் புறத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மெழுகுச் சிலையாக நின்று நம்மை மகிழ வைக்கிறார்.

கலைஞர் படைப்புகள் – நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 நூல்களின் பெயர்கள் காணப்படும். அவை ஒவ்வொன்றின் மீதும் நாம் கை வைத்தால் அந்த நூல் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்கும். அடுத்து, “அரசியல் கலை அறிஞர் கலைஞர்” எனும் அறைக்குள் செல்லலாம். எதிரே கலைஞரின் பெரிய நிழற்படம். வலப்பக்கம் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் எதிரில் வெள்ளித்திரை: அதில், ஏறத்தாழ 20 நிமிடங்கள் கலைஞரின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அருமையான படக் காட்சிகளாக, கலையும் அரசியலும் எனும் தலைப்பில் நம்முன் தோன்றி நம்மை வியக்க வைக்கும்.

அடுத்த அறையில், “சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” தலைப்புடையது. அதில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். நாம் அமர்ந்த நிலையில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலையங்களைக் கடந்து சென்னையை அடையலாம். அந்தந்த ஊர்களில் கலைஞர் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும். வழியில் யானையொன்று நாம் பயணிக்கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்கம் செலுத்தி, வாழ்த்துவது நம்மை மெய் சிலிர்க்க வைத்திடும்.

அறைகளுக்கு வெளியே அமைந்துள்ள நடையில் இருபுறங்களிலும், பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கலைஞர் முதலான தலைப்புகளில் அமைந்த அரிய புகைப்படங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அப் பகுதியில் 5 தொலைக்காட்சிப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

நேர் எதிரே- கலைஞர், மு.க.ஸ்டாலின் தோன்றும் புகைப்படம் பெரிய அளவில் அமைந்து “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தொடரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையை பயன்படுத்தி அமர்ந்த நிலையில் கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் காட்சி நம்மை அற்புத உலகிற்கு அழைத்துச் செல்லும். நடை பாதையை விட்டு, வெளியே வந்தால், நேர் எதிரே கலைஞர் புத்தக விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கே, கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் கண்டு வெளியே வர முனைந்தால் வழியில் வலப்புறச் சுவர்களில் – தமிழர்களின் கலாச்சார மையம் . வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை முகப்புக் கட்டடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில் நம்மை மயங்க வைக்கின்றன.

இவற்றையெல்லாம் பார்த்து வெளியேவர நினைத்தால், கலைஞருடன் கலந்து பேசிப் பழகிய ஓர் புதிய அற்புத உணர்வு நமக்கு ஏற்படும். வெளியே வரும்போது – இருபுறங்களிலும் கலைஞரின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும், கலைஞரின் புதிய நினைவிடமும் பல ஆண்டுகள் வரை நம் நெஞ்சைவிட்டு என்றும் நீங்காமல் நம்மை ஆட்கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி. அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார்.

You may also like

Leave a Comment

five − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi