மயிலாடுதுறை,ஜூலை29: மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்ல பணியாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பினை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களில் உள்ள பணியாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்த ஒருநாள் பயிற்சி மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இல்லத்தில் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லங்களும் செயல்பட்டு வருகின்றன.