மதுரை தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், உத்தமபாளையம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் 25 சதவீத ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை. எனவே (அப்போதைய) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் சிவதாஸ்மீனா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: இதில் தற்போதைய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் கார்த்திகேயன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். எதிர்மனுதாரரான அதிகாரி தான் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிந்து கொள்வார்கள் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. எனவே அப்போது நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருந்த தற்போதைய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆக. 21ல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.