Sunday, May 19, 2024
Home » சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

by Porselvi

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் #பொங்கல்_பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன். சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,19,71,113 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 77 இலட்சம் இலவச வேட்டிகள், 1 கோடியே 77 இலட்சம் இலவச சேலைகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்” என்ற குறளில் அய்யன் திருவள்ளுவர், உழவுத் தொழிலே சிறந்தது என்றும், உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது என்றும் புகழ்ந்த உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், ஆகியவற்றை 2,19,71,113 குடும்பங்களுக்கு 2436.19 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில், 1 கோடியே 77 இலட்சம் வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளை வழங்கிட தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.

அதன்படி, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.1.2024) சென்னை, ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ் நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார்.

இப்பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

ten − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi