செங்கல்பட்டு: பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், பரனூரில் தொழுநோயாளர்களுக்கான மறுவாழ்வு இல்லம் 1971-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரசு மறுவாழ்வு இல்லத்தில் தற்போது 61 ஆண்கள் மற்றும் 58 பெண்கள், என மொத்தம் 119 நபர்கள் வசித்து வருகின்றனர். “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் செல்லும் வழியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.4.2023) செங்கல்பட்டு மாவட்டம், பரனூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், முதலமைச்சர் இவ்வில்லத்தில் வசிப்பவர்களிடம் இங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இல்ல வாசிகளுக்கு போர்வைகள் மற்றும் உடைகளை வழங்கினார். பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருவதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இல்ல வாசிகள், உணவூட்டு செலவினத்தை 42 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தியமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். மேலும், 5-வது வார்டில் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியினை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், குப்பை வண்டி வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.
அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர், அவற்றை உடனடியாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது, அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.