புதுடெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தை எதிர்த்து சட்டீஸ்கர் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்திற்கு (பிஎம்எல்ஏ) எதிராக சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தை எதிர்த்து மாநில அரசு தரப்பில் வழக்கு தொடரப்படுவது இதுவே முதல் முறை. மனுவில், ‘இந்த சட்டத்தை பயன்படுத்தி, அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் போர்வையில், எங்கள் அதிகாரிகளையும், மக்களையும் சித்ரவதை, துஷ்பிரயோகம் செய்கிறது. இந்த அப்பட்டமான, தாங்க முடியாத துஷ்பிரயோகம் காரணமாக நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 4ம் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில், வழக்கை ஒத்திவைக்க சட்டீஸ்கர் அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதன் படி, விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டது.