சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்புடைய சேவைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் பிற சேவைத் துறைகளான சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மின்சார வாரியம், பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தென்னக இரயில்வே ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகளை தொய்வில்லாமல் விரைவில் முடிக்கவும், ஏதேனும் குறைகள் காணப்படின் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்து பணிகளை விரைவில் முடிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். மக்களுக்கான திட்டப்பணிகள் குறித்த காலத்தில் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், முதன்மைச் செயலாளர்/சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு), எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.பி.அமித், தலைமைப் பொறியாளர்கள், பிற துறையைச் சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.