Sunday, October 6, 2024
Home » சென்னை, புறநகர் பகுதிகளில் கோகைன் விற்ற நைஜீரியர் கைது வழக்கில் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைப்பு: அடுத்தகட்ட விசாரணை தீவிரம்

சென்னை, புறநகர் பகுதிகளில் கோகைன் விற்ற நைஜீரியர் கைது வழக்கில் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைப்பு: அடுத்தகட்ட விசாரணை தீவிரம்

by Suresh

அண்ணாநகர்: மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்து கோகைன் போதைப் பொருட்களை வாங்கி வந்து சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த சின்டு ஒனாச்சி (47) அவரது மனைவி எஸ்மெல்சியா மிகாய் (50) மற்றும் சியோ இன்லெக்வு (40) ஆகிய மூன்று பேரை அமைந்தகரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் படி சென்னை அண்ணாநகர், பெரும்பாக்கம், வியாசர்பாடி ஆகிய பகுதியை சேர்ந்த அனிருத் சவுத்ரி(34), வால்சாம் (30), ரித்தேஷ் (34), அங்கூர் சோட்டா (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கோகைன் போதைப்பொருள் எப்படி சென்னைக்கு வந்தது என்பதை கண்டுபிடிக்க, முக்கிய குற்றவாளியான சின்டு ஒனாச்சியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அமைந்தகரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி சின்டு ஒனாச்சியை, புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்தகரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கோகைன் விற்பனை செய்ய நைஜீரிய நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவழைத்ததாகவும், அதேபோல் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்தும் போதைப்பொருளை வாங்கி வந்து, 10 வருடங்களாக சென்னை புறநகர் சுற்று வட்டார ஆகிய பகுதியில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும், நைஜீரிய நாட்டில் இருந்து போதைப்பொருள் தமிழ்நாட்டிற்கு வரவைத்து, நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்து வருபவர்கள் வங்கி கணக்கு மூலம் நைஜீரியாவுக்கு பணம் பரிமாற்றம் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் போலீஸ் காவல் முடிந்து சின்டு ஒனாச்சியை போலீசார் மீண்டும் புழல் சிறையில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று அடைக்கப்பட்டார். தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நைஜீரியா நாட்டிலிருந்து வந்தவர்களின் பட்டியலை தயார்செய்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

one + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi