திருமலை: ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கியதில் மோசடி நடந்ததாக கூறி முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவுபடி சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் சந்திரபாபுவை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அமராவதி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு, பைபர் நெட் முறைகேடு என அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் சந்திரபாபு முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே தேர்தல் முடிவு வெளியான பிறகு முதன்மை செயலாளர் ஜவகரிடம் சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் ஒரு நாள் முன்னதாக விடுமுறை அளித்ததுபோல் கையெழுத்திட்டு வழங்கினார். இதனால் சஞ்சய் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இதையறிந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நேற்று காலை டெல்லி செல்வதற்கு முன்பு தன்னை சந்திக்க மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு வந்த முதன்மை செயலாளர் ஜவகரிடம் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது சஞ்சய்யை ஏன் விடுப்பில் அனுப்பினீர்கள் என கோபமடைந்ததாக கூறப்படுகிறது.