சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புயல் வலு குறையாமலேயே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 780 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, டிச.3ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். வங்கக்கடலில் உருவாகும் புயல், மேலும் வலுவடைய சாதகமான சூழல் உள்ளது. கரையை நெருங்கி பயணித்தாலும், வலு குறையாமல் புயல் என்ற அளவிலேயே கரையை கடக்கும். புயலின் மையப்பகுதி சரியாக எங்கு கரையை கடக்கும் என்பது உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் இவ்வாறு கூறினார்.