புதுடெல்லி: இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடி பெயர்ந்து 200 ஆண்டுகள் கடந்துள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியானது டெல்லியில் உள்ள பாஜ தேசிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு தபால் தலையை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் பெற்றுக் கொண்டார். இதையடுத்து பேசிய ஜே.பி.நட்டா கூறியதில், ‘‘இலங்கை தமிழர்கள் சந்தித்த துயரங்கள் என்பது அதிகப்படியான வலிகள் நிறைந்தது.இதையடுத்து நடத்தப்பட்ட பெரும் புரட்சியின் மூலம் தற்போது இலங்கை தமிழர்களின் நிலைமை மாறியுள்ளது. அவர்களின் இந்த தியாகங்களை நாம் நினைவு கூற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காக தான் இந்த தபால் தலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார்.