நிலக்கோட்டை: செம்பட்டி அருகே வடிவேலு பட பாணியில் வெங்காயத்தை திருடிய ஒருவர் சிக்கினார். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உத்தயகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் முத்துராஜ் (54), ராமசாமி (66). இவர்கள் வெங்காயத்தை அறுவடை செய்து, விற்பனை செய்தது போக மீதமுள்ள தரமான வெங்காயத்தை பிரித்து விதைக்காக பட்டறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் காமுபிள்ளைசத்திரத்தில் செங்கல் காளவாசல் நடத்தி வரும் அழகம்பட்டியை சேர்ந்த செல்வம் (50), பொன்ராம் (47) ஆகியோர், பட்டறையில் இருந்த தலா 50 கிலோ கொண்ட 15 மூட்டை வெங்காயங்களை திருடினர். அவற்றை செல்வத்தின் காளவாசலில் பதுக்கி வைத்திருந்தனர்.
இவர்கள் வடிவேலு படப்பாணியில், பட்டறையிலிருந்து செங்கல் காளவாசல் வரை அவசரத்தில் வெங்காயத்தை வழி நெடுகிலும் சிதற விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் முத்துராஜ், ராமசாமி ஆகியோர் வெங்காயம் சிதறி கிடந்த வழியாக சென்று, காளவாசலில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அங்கு இருந்த பொன்ராமை பிடித்து செம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து 15 மூட்டை வெங்காயம், திருட பயன்படுத்திய 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். தப்பிய செல்வத்தை தேடுகின்றனர்.