மும்பை: வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய வலதுசாரி பெண் ஆதரவாளர் காஜல் இந்துஸ்தானி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை ஒட்டியுள்ள மீரா ரோடு பகுதியில், இந்து ஆக்ரோஷ் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் வலதுசாரி பெண் ஆதரவாளரான காஜல் இந்துஸ்தானி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில் குறிப்பிட்ட மதத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் பேசியதால், அவர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் டி.சி.பி ஜெயந்த் பஜ்ப்ளே கூறுகையில், ‘வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய காஜல் இந்துஸ்தானி மீது 153 ஏ மற்றும் 505 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு, சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.