*போதை வாலிபர்கள் அட்டகாசம்
ஈரோடு : ஈரோட்டில் கார்கள் மற்றும் சரக்கு வேன்கள் என 10 வாகனங்களின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் சாலையோரமாக பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு கார், ஆட்டோ, சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்கள் எழுந்து வெளியில் வந்து பார்த்த போது அங்கு சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக கார்கள், சரக்கு வேன் உள்ளிட்ட 10 நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு கண்ணாடிகள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு நொறுங்கி கிடந்தது. இதே போல ஒரு சில கார்களின் பக்கவாட்டு கண்ணாடிகளும் முழுவதுமாக உடைந்து நொறுங்கி கிடந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், குடிபோதையில் வரும் சிலர் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. எனவே மர்மநபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.