டெல்லி: கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு பிரதமர் மோடியின் பதாகைகளை வைக்க முடியாது என முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கேரள சட்டப்பேரவையில் நேற்று ரேஷன் கடை தொடர்பான விவாதம் எழுந்தது. அப்போது; பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ், ”கேரளாவில் உள்ள 14,000 ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில், பிரதமரின் செல்பி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை செயல்படுத்த அதிகாரிகள் குழுவையும் நியமித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரேஷன் விநியோக முறையை தேர்தல் விளம்பரத்துக்கு பயன்படுத்துவது சரியல்ல. விவாதங்களுக்கு பின் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
இது குறித்து, ஐ.யு.எம்.எல்., – எம்.எல்.ஏ., அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன்; ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட இலட்சினை உடன், பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கும், செல்பி பாயின்ட் உருவாக்குவதற்குமான ஒன்றிய அரசின் உத்தரவை ஏற்கப் போவதில்லை.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரசாரத்தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.