சோழிங்கநல்லூர்: சென்னை மாதவரம், அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரோஸ். இவர்களுக்கு நரேஷ்குமார் (33), விக்னேஷ் குமார் (30), என 2 மகன்கள் உள்ளனர். ஆட்டோ டிரைவர்களான 2 பேரும், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஸ்கர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ரோஸ், மாதவரம் பாண்டியன் தெருவில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார்.
அங்கிருந்தபடி, மாதவரம் தபால் பெட்டி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அம்பேத்கர் நகரில் உள்ள குடும்ப சொத்தை, அதே பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்ய அண்ணன், தம்பி இருவரும் முடிவு செய்து, அதற்கான முன்பணமும் பெற்றனர். இப்பணத்தை பகிர்த்து கொள்வதில் அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை விக்னேஷ்குமார், அம்பேத்கர் நகரில் சவாரி ஏற்ற ஆட்டோவுடன் நின்றிருந்தார். அப்போது, மற்றொரு ஆட்டோவில் அங்கு வந்த நரேஷ்குமார், எனக்கு சொத்து விற்பனை செய்ததில் அதிகமாக பணம் தரவேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அண்ணன் நரேஷ்குமார், ஆட்டோவில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து தம்பி விக்னேஷ்குமாரின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்து கீழே விழுந்த தம்பி விக்னேஷ்குமாரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி விக்னேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மாதவரம் இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம், நரேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட விக்னேஷ்குமாருக்கு வாசுகி என்ற மனைவியும், புவிஷா என்ற 5 வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.