* விசாரணை நடத்த உத்தரவு
டேராடூன் : கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க முலாம் பூசுவதற்கு பதில் பித்தளை முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.125 கோடி மோசடி நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கமாகும். இந்த நிலையில் பக்தர் கொடுத்த காணிக்கையின் மூலமாக கோயிலின் கருவறை சுவர்களுக்கு தங்கமுலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டது. இதற்காக 23777.800 கிராம் தங்கமும் 1001.30 கிராம் தாமிரமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதற்காக ரூ.125 கோடி செலவழிக்கப்பட்டது.
ஆனால் இவை பித்தளையாக இருப்பதாக சமீபத்தில் கோயிலின் சர்தாம் மகாபஞ்சாயத்தின் துணை தலைவர் சந்தோஷ் திரிவேதி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில் தங்க முலாமிற்கு பதிலாக பித்தளை பயன்படுத்தப்பட்டு இருந்தது.இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில சுற்றுலா மதம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சத்பால் மகராஜ் ‘‘கோயிலில் தங்கமுலாம் பூசுவதற்கு அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டது. ஆனால் தற்போது கேதார்நாத் கோயிலில் மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகின்றது. மோசடி குறித்து விசாரணை நடத்துவதற்கு கர்வால் ஆணையர் தலைமையில் உயர்மட்ட குழுவை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றார்.