திருமலை: ஆந்திராவில் பண்ணை குட்டைக்காக பயன்படுத்தி வரும் ஆழ்துளை கிணற்றில் தண்ணீருடன் தீப்பிழம்பு ஏற்பட்டு பல அடி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராஜோலு மண்டலம் சிவகோடு பகுதியில் பண்ணைக்குட்டை அமைத்து மீன்கள், இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை பண்ணை உரிமையாளர் வழக்கம்போல் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக ‘சுவிட்ச் ஆன்‘ செய்தார்.
அப்போது திடீனெ கிணற்றில் இருந்து தண்ணீருடன் சேர்ந்து நெருப்பும் சேர்ந்து தீப்பிழம்பாக வெளியேறி கொழுந்துவிட்டு எரிந்தது. பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்தது. நெருப்பும் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இந்த பண்ணை குட்டையில் இருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில் ஓ.என்.ஜி.சி. உலர்கிணறு இருக்கிறது. இதுகுறித்து அப்பகுதியினர் ஓஎன்ஜிசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.