திருப்பத்தூர்: திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று ஆம்பூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் அனுப்பியதாக ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் எஸ்பி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்து இருப்பதால் பல உயிர் சேதங்கள் ஏற்படும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட ராஜா என்பவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவர், நான் இதுபோன்ற கடிதமே அனுப்பவில்லை. எனது பெயரை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என கூறினார். இதை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, எஸ்பி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்த பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.