வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரை சேர்ந்தவர் பிரபாகர். ஆட்டோ டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் மாலை வெள்ளைக்கல்மேடில் இருந்து காங்கேயநல்லூருக்கு ஆட்டோ ஓட்டிச்சென்றார். வழியில் அவரை வழிமறித்த 2 பேர், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் பிரபாகர் பணம் தர மறுத்தார். இதனால் அவர்கள் 2பேரும் சேர்ந்து, ஆட்டோ டிரைவர் பாக்கெட்டில் இருந்த ரூ.1000ஐ பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து பிரபாகர், காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் காட்பாடி அடுத்த தண்டலம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வேலூர் மாவட்ட பாஜ சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் ராஜேஷ்(28), பாஜ மாவட்ட இளைஞரணி செயலாளர் நவீன்குமார்(27) ஆகியோர், ஆட்டோ டிரைவர் பிரபாகரை வழிமறித்து பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிகொண்டாவில் வேலூர் மாவட்ட பாஜ இளைஞரணி தலைவர் கிளி (எ) சதீஷ் என்பவர், நேற்றுமுன்தினம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜ நிர்வாகிகளான ராஜேஷ், நவீன்குமார் ஆகியோர் காட்பாடி அருகே வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.