தேனி: பாஜக கூட்டணியில் சேர வேண்டும் என தாம் மிரட்டப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள தாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டணி சேர்ந்திருந்தால் 500 கோடி கூட கொடுத்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுகுறித்து தேனியில் பரப்புரை கூட்டத்தில் பேசிய சீமான், பாஜக கூட்டணியில் சேர தன்னை எவ்வளவு மிரட்டியிருப்பார்கள். எவ்வளவு ஆசை வார்த்தை காட்டியிருப்பார்கள்.
என் காதில் டன் கணக்கில் தேனை ஊற்றினார்கள். பாஜகவின் எந்த சமரசத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் கூட்டணிக்கு வருகிறேன் என்று கூறியிருந்தால் 1000 கோடி கொடுத்திருப்பார்கள். இல்லையெனில் குறைந்தது 500 கோடியாவது கொடுத்திருப்பார்கள். 10 முதல் 15 சீட்டுகளை அளித்திருப்பார்கள். பாஜகவுக்கு தனியாக நிற்க துணிவு இல்லை; களம் காண வேட்பாளர்கள் இல்லை என்று கடுமையாக சாடினார். இது மானதமிழ் மறவனின் கோட்டை; வந்தவன் போனவர்களை எல்லாம் உள்ளே நுழைய விட மாட்டோம் என்றும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.