டெல்லி: கர்நாடகாவில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அமித்ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி 128 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான பாஜக 67 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் கர்நாடகாவில் அடுத்த தங்கள் ஆட்சி தான் அமையப்போகிறது என்று காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி , நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை பறிகொடுக்கிறது. தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சி இல்லை. பாஜகக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து டெல்லியில் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே குமாரசாமி தரப்பை பாஜக அணுக முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.