அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்னையால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானார். இதனால் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் சசிகலா மற்றும் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவை விரைவில் ஒன்றிணையும் என்று கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஓபிஎஸ்சும் சமீப காலமாக சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுடன் கைக்கோர்த்து அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்று கூறி வருகிறார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என ஓபிஎஸ்சும், டிடிவி தினகரனும் கூறி வருகிறார்கள். தற்போது பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இருவருமே தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை பாஜ தலைமையிடம் கொடுத்துள்ளனராம். அதில் திருச்சி, தஞ்சாவூர், தேனி, சிவகங்கை, விருதுநகர், வடசென்னை, தென்சென்னை ஆகிய 7 தொகுதிகளை இருவருமே கேட்டுள்ளார்களாம்.
தேனி கடந்த தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வென்ற தொகுதி. இதே தொகுதியில் ஏற்கனவே தினகரனும் வெற்றி பெற்றுள்ளார். இருதரப்புமே 7 தொகுதிகளையும் விட்டுத்தர முன்வரவில்லையாம். இதனால் இந்த பிரச்னையை தீர்ப்பதில் பாஜ தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் அண்மையில் சென்னை வந்த பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ஓபிஎஸ் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரே தொகுதியை இரு கட்சிகள் கேட்பது வழக்கமானது தான்.
அது பேச்சுவார்த்தையில் சரி செய்யப்படும். இதில் எந்த பிரச்னையும் ஏற்படாது’ என்றனர். ஓபிஎஸ்- டிடிவி தினகரன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், இருவருமே ஒரே தொகுதிகளை போட்டியிட கேட்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேனி தொகுதியை கேட்டு ஓபிஎஸ்க்கு செக் வைக்க டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தனக்கு செல்வாக்கு தொகுதிகளில் போட்டியிட்டால் ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என ஓபிஎஸ் நம்புகிறராம். இதன்மூலம் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்ள அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரின் தொகுதி பங்கீட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.