அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் பேசியதாவது:
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. குஜராத்தில் இருந்து ஒரு தலைவர் 10 ஆண்டுக்கு முன்பு தனது பயணத்தை தொடங்கிய போது, பெரிய பெரிய வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரும், அவரது அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நலித்த பிரிவினர் ஆதரவின்றி வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகால வரலாறு, இருண்டதாகவும், அநீதி, அராஜகம் நிறைந்ததாகவும், வெறுப்பையும், குரோதத்தையும் பரப்புவதாகவும் இருந்திருக்கிறது. இந்திய ஜனநாயகம் தற்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. அரசியலமைப்பு சட்டத்தையே ஒழிக்கப் பார்க்கிறார்கள். எனவே, துரதிஷ்டவசமாக பாஜவும், மோடியும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 2024 மக்களவை தேர்தலே நாட்டில் நடக்கும் கடைசி தேர்தலாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.