பாஜவில் சேர்ந்ததாக கூறப்படும் லிஸ்ட்டில் அவிநாசி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்புசாமி பெயர் இடம் பெற்று இருந்தது. இதனை பார்த்து அவர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘1982ம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தேன். அதன்பின், கிளைச்செயலாளர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தேன். ஜெயலலிதா என்னை சட்டமன்ற உறுப்பினராக மாற்றினார்.
பாஜவில் இணைவதற்கு முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் என்னை அழைத்தனர். ஆனால், நான் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டேன். பாஜவில் இணைய எனக்கு விருப்பமில்லை. இருப்பினும், நான் இணைந்ததாக பொய்யாக எனது பெயருடன் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அருந்ததிய மக்களுக்கு அதிமுகவில் ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. நான் எப்போதும் அதிமுக தொண்டனாகவே இருப்பேன். நான் மாற்றுக் கட்சியில் இணைய போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.