Sunday, May 12, 2024
Home » பிறப்பு, இறப்பு, திருமண பதிவு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு சான்றிதழ்கள் வழங்கும் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும்

பிறப்பு, இறப்பு, திருமண பதிவு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு சான்றிதழ்கள் வழங்கும் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும்

by Lakshmipathi

*மாவட்ட லோக் அதாலத் நீதிபதி பேச்சு

சித்தூர் : பிறப்பு, இறப்பு, திருமண பதிவு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் வழங்கும் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட லோக் அதாலத் நீதிபதி பேசினார். சித்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் மாவட்டப் பதிவாளர் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள், சான்றிதழ்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சித்தூர் மாவட்ட லோக் அதாலத் நீதிபதி கருணா குமார் தலைமை தாங்கி, சான்றிதழ்கள் வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது அவர் ேபசியதாவது: பிறப்பு, இறப்பு, திருமண பதிவு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த 3 அம்சங்களும் மிக முக்கியமான பதிவுகள் ஆகும். மேலும் சான்றிதழ்கள் வழங்கும் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும். இந்த சட்டங்கள் குறித்த அடிப்படை விழிப்புணர்வை சாமானிய மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக, திருமணப் பதிவு பற்றிய பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதைத் தவிர, திருமணப் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது அவசியம்.

தற்போதைய சூழ்நிலையில் திருமணங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் மாநகராட்சி ஆணையர் அருணா பேசுகையில், ‘மாநகராட்சிக்குள் பிறப்பு, இறப்பு, திருமணம் பதிவு செய்யும் பணி முறையாக நடைபெற்று வருகிறது. நீதிபதி அறிவுறுத்தலின்படி விரிவான சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதையடுத்து மாவட்டப் பதிவாளர் கே.சீனிவாச ராவ் கூறுகையில், ‘திருமணப் பதிவுகளை எளிதாக மேற்கொள்ள ஆன்லைன் போர்டல் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்வதன் மூலம், தாமதமின்றி சரியான நேரத்தில் சான்றிதழ்களைப் பெறலாம்’ என்றார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விண்ணப்பித்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு திருமண பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டிபிஓ லட்சுமி, உதவி ஆணையர் கோவர்தன், பலமேனர் நகராட்சி ஆணையர் ரமணா, எம்எச்ஓ டாக்டர் லோகேஷ், சிஎம்எம் கோபி, ஏஎஸ்ஓக்கள் சவுந்தர் ராஜன், நரசிம்மா, ஊராட்சி, வார்டு செயலாளர்கள், மாவட்ட பதிவு ஊழியர்கள், சிஇஓக்கள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi